No results found

    எதிர்பார்ப்பின்றி வாழ்வை தொடங்குவோம்


    இன்றைய காலச்சூழலில் வாழ்க்கை என்பது பலவிதமான எதிர்பார்ப்புகளோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது. “என்னால் எல்லாம் முடியும். எனக்கு எல்லாம் வேண்டும்“ என்ற சிந்தனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பொருள் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கூட முதுமையின் போது இயலாமையால் தவிக்கிறார்கள். அந்த சமயத்தில், வாழ்வில் பெற்ற அனைத்து நலன்களும் வீண் என்றே அவர்கள் கருதுகின்றனர். இதே சிந்தனையை உள்வாங்கி வாழ்வை நகர்த்தினால் நாம் இயல்பாக வாழ முடியும். அதே போல எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் உதவிக்கு நன்றியை கூட எதிர்பார்க்க கூடாது. எதிர்பார்ப்புகள் அற்று வாழ்வது மிகவும் அவசியம். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றமும், உயர்ந்த விரக்தியும் உருவாகும்.

    தன் வாழ்வில் நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்ற புலம்பலோடு இளைஞன் ஒருவர் துறவியை தேடிச் செல்கிறான். அவரை பார்த்ததும் தன் அனைத்து குறைகளையும் கொட்டித்தீர்க்கிறான். சில நிமிட மவுனத்துக்கு பிறகு அந்த துறவி, ‘இளைஞனை பார்த்து உன் வாழ்வின் எதிர்பார்ப்பு என்ன?‘ என்று கேட்கிறார். உடனே இளைஞன், ‘எனக்கு மகிழ்ச்சி வேண்டும்‘ என்று துறவியிடம் கூறினான். பின்னர், ‘மகிழ்ச்சிக்காக என்ன செய்தாய்? எதையெல்லாம் இழந்திருக்கிறாய்‘ என்று துறவி கேட்டார். ஆனால் துறவி கேட்டதற்கு இளைஞனால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அவன் அப்படியே அமைதியாக நிற்கிறான். இன்றைய உலகில் நாமும் ஏராளமான எதிர்பார்ப்புகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு வாழ்கின்றோம். ஆனால் நல்லது எதையும் இழப்பதற்கு நாம் முன் வருவதில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசைப்படும் நாம் எதுவுமே வேண்டாம் என சிந்திப்பது இல்லை. கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என்று தூய பவுலடியார் சொன்னது போல நம் ஒவ்வொருவரின் மன நிலையும் மாற வேண்டும். 

    அருட்பணி. குருசு கார்மல், 

    தூய பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால், 

    கோட்டார் மறைமாவட்டம்

    Previous Next

    نموذج الاتصال