இயேசுவுக்கு பிடிக்காதவர்கள் யார்? என்றால், அது பரியேசர்கள் போன்றவர்கள் தான். ஏனெனில் பரியேசரின் மனநிலை என்பது தன்னை ஜெபத்தில் கூட விளம்பரப்படுத்தி கொள்வது போன்று இருந்தது. அது, சொல் ஒன்றாகவும், செயல் மற்றொன்றாகவும் இருக்கும் மனநிலை. அத்தகையவர்கள், பிறர் நம்மை பார்க்க, போற்ற, புகழ வேண்டும் என்ற சுயநலத்துடன் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். தான் இழிவானதொரு வாழ்க்கை வாழ்ந்தாலும் பிறருக்கு முன்னே தன்னை யோக்கியர் என்று காட்டிக்கொள்வர். ஆண்டவர் இயேசு, உங்கள் செயல்பாடுகளே சிறந்த சான்றுகள் என கூறியுள்ளார்.
ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்வினை பார்க்காதே என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால் இந்த சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தனி மனித மனமாற்றம் தான் சமுதாய மாற்றத்துக்கு ஆணி வேராகும். அது தன்னிலை உணர்தலில் தான் ஆரம்பம் ஆகிறது. எனவே, மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள், இறையாட்சி வந்து விட்டது என்ற இயேசுவின் போதனையை ஏற்று, சொல்லால் அல்ல, செயலால் வாழ்ந்து காட்டுங்கள்.
அருட்பணி. ஜான்பீட்டர், இயக்குனர்,
புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.